கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சி! பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள், T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் குறித்த பொலிஸ் அதிகாரியின் உடமையில் இந்த துப்பாக்கி ரவைகள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த அதிகாரி இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் விமான நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த சந்தர்ப்பத்திலேயே, குறித்த பொலிஸ் அதிகாரி, விமான நிலையத்திற்குள் துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



