ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதனை நீக்கியுள்ளார்.
சுமார் 62 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில், 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
காணொளியஜஇறுதியில், 'த லயன் ஸ்லீப்ஸ் டுநைட்' (The Lion Sleeps Tonight) என்ற பாடலுடன், பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி கார்ட்டூன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.
எக்ஸ் தள பதிவு
இது தவிர, ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் விலங்குகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

இந்த காணொளி பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ட்ரம்ப்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியின் கறுப்பின செனட்டருமான டிம் ஸ்கொட், "வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது" என்று விமர்சித்ததோடு, உடனடியாக அதனை நீக்க வலியுறுத்தினார்.
அத்துடன் கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் "ஜனாதிபதியால் செய்யப்பட்ட அருவருப்பான செயல் இது; ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் இதனை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதேநேரம் எப்ஸ்டீன் விவகாரம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ட்ரம்ப் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடும் விமர்சனம்
ஆரம்பத்தில் இது வெறும் "இன்டர்நெட் மீம் காணொளி" (Internet Meme Video) என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வாதிட்டார். ஆனால், சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, "ஊழியர் ஒருவரின் தவறால் அந்த காணொளி பகிரப்பட்டுவிட்டது" என்று கூறி வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அதனை நீக்கினார்.

ஜனாதிபதி ட்ரம்ப் நீண்டகாலமாகவே பராக் ஒபாமாவைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார். முன்னதாக, ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று ஆதாரமற்ற வாதத்தைத் தூண்டிவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட இத்தகைய இனவெறிச் சித்திரங்கள் அமெரிக்க அரசியலில் நாகரீகமற்ற போக்கை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 14.4வீத மக்கள் கறுப்பினத்தவர்கள் (Black or African American) ஆவர். இத்தகைய இனவெறிச் சித்தரிப்புகள் கறுப்பின மக்களிடையே பெரும் மனக்காயங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.