டிரம்பின் வரிக் கொள்கையால் பாதிக்கப்படவுள்ள இலங்கை
அமெரிக்க ஜனாதிபதியின் வரிக் கொள்கை தொடர்பில் வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முடிவடைவதற்கு முன்பு, ஒரு நாடாக இலங்கை அதன் கட்டண கொள்கையை தளர்த்துவதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
விவசாய உபகரணங்கள், உப்பு மற்றும் முட்டைகள் மீதான இறக்குமதி வரிகள் தளர்த்தப்பட வேண்டும். சுதந்திர வர்த்தகத்தை நோக்கி நகர சந்தை தடைகள் நீக்கப்பட வேண்டும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவால் இறக்குமதி வரிகள் மற்றும் சந்தை தடைகள் நீக்கப்பட வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கமைய, அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சந்தை கட்டணக் கொள்கை நிறுவப்பட வேண்டும்.
பொருளாதாரக் கொள்கை
அமெரிக்க ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைக்கு மேலதிகமாக நீண்ட காலமாக ஒரு பாதுகாப்பான பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தி போதுமான சந்தை சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் தவறியுள்ளது.
அதற்கமைய, ஒரு நாடாக நாம் இப்போது அல்லது பின்னர் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழைய வேண்டும். அத்தகைய சமரசம் எட்டப்படாவிட்டால், இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் சர்வதேச சந்தையில் மிகவும் பாதகமான சந்தை நிலைமைகளின் கீழ் போட்டியிட வேண்டியிருக்கும்.
ஆடைத் துறை
அதற்கமைய, இலங்கை ஆடைத் துறையில் அதன் உலகளாவிய சந்தைப் பங்கை இழக்கும் அபாயத்தில் இருப்பது மட்டுமல்லாமல், அந்தத் துறையில் இருக்கும் முதலீடுகளையும் இழக்கும் அபாயத்தில் உள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படாததன் விளைவுகளை நாடு இப்போது அனுபவித்து வருகின்றது என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.