திருகோணமலை மாணவர் படுகொலை: நீதி கேட்டால் அநீதியே கிடைக்கும்

Srilanka America Death Police Army Arrest
By Jera Jan 03, 2022 03:45 PM GMT
Report
Courtesy: ஜெரா

திருக்கோணமலை கடற்கரை வழமைபோன்று ஆரவாரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இருண்டிருந்த அரசியல் மேகம் ஆங்காங்கே பீதியலைகளை எழுப்பிக்கொண்டிருந்தது.

சூட்டுச் சம்பவங்கள் நடந்தன. ஆட்கடத்தல்கள் தொடர்ந்தன. குண்டுவீச்சுக்கள் வழமையாயிருந்த காலமது. ஆயுதங்களை அணிந்த தரப்பினர் இனந்தெரிந்தும், இனந்தெரியாமலும் அந்த வெளியெங்கும் கண்காணித்து அலைந்தனர்.

இவையெதையும் கவனிக்காத இளைஞர் கூட்டமொன்று அந்தப் பெரிய கடற்கரையின் காந்தி சிலைக்கு அருகில் இருந்த நீண்ட கல் இருக்கை மீது அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தது. அவர்களின் கதைகளில் நடைபெற்று முடிந்த பரீட்சை பற்றிய கதைகளே அதிகம் இருந்தன.

இவ்வாறாக, கடல் அலையை உடைத்துக்கொண்டு மேலெழுந்த அவர்களின் சிரிப்பு வெடிகள் சூழலில் நடப்பவற்றை மறைத்திருந்தது. அந்தச் சூழலில் திடீரென ஒரு அசம்பாவித மழை அடித்தது.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு வேகமாக ஓடி மறைந்தனர். அந்தக் கைக்குண்டு வெடித்ததில் அமர்ந்திருந்த ஐவரில் ஒருவன் காயப்பட்டு வீழ்ந்தான்.

திருமலை புனித ஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என அறியப்பட்டவனின் காலை அந்தக் குண்டு பதம்பார்த்திருந்தது. சக நண்பனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மிஞ்சியிருந்தவர்கள் முயன்றனர். மரண பயம் அவர்களை முந்திக்கொண்டு பாய்ந்தது.

நடுக்கமும், மிரட்சியும் அந்த இடமெங்கும் படர்ந்திருக்கையில் படையினரின் துப்பாக்கிகள் உரத்துப் பேசத் தொடங்கின.

10 நிமிடங்கள் வரையில் அவைகளின் உறுமல் இருந்தது. தாறுமாற சுடுதலை பலர் அப்போதுதான் அறிமுகப்பட்டனர். எல்லா பக்கமும் சிதறியோடினர். ஆனால் காயப்பட்ட நண்பனை விட்டு ஏனைய நால்வரும் அகலவில்லை. அவனின் இறுதிக் கணங்களைத் தாங்கியபடி நின்றிருந்தனர். அவர்களை கவனித்த துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினர் அவர்களைத் தாக்கி நிலத்தில் வீழ்த்தி, குண்டு வீசியவர் யாரென்று விசாரித்தனர். தெரியாது என்ற மாணவர்களின் வார்த்தையைக் கோரமாக எதிர்கொண்டனர்.

மாணவர்களைக் கீழே விழுத்தி அவர்களின் நெஞ்சை தமது சப்பாத்துக்கால்களினால் மிதித்ததனர். காதுக்கருகில் துப்பாக்கி முனையை வைத்து அழுத்தினர். துப்பாக்கிமுனை நெற்றியில் அழுத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், மனோகரன் ரஜீகர் என்ற மாணவன் தன் தந்தைக்கு தொலைபேசியில் “அப்பா எங்கள சுற்றி ராணுவம் நிற்குது” என அவலக் குரலில் தகவல் சொன்னான்.

மறுகணமே வேட்டுச் சத்தங்கள் கேட்டன. ரஜீகரின் குரல் மூர்ச்சையானது. அந்த இடத்திலேயே ஐந்து தமிழ் மாணவர்கள் பலியாகினர். தலைநகரின் சந்தோசம் தொடர்ந்து வந்த காலத்தில் இருண்டுபோனது. இதனைக் கேட்டு தம் பிள்ளைகளைத் தேடிவந்த பெற்றோர் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பலர் முன்னிலையில், போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் முன்னிலையில் நடந்த படுகொலையை இராணுவம் பொய்யென்றது.

இராணுவத்தை நோக்கி குண்டு வீச வந்தவர்களே செத்தொழிந்தனர் என்றது. ஆனால் அது அனைத்தும் பொய்யென்பதை ஒரு புகைப்படப்போராளி உறுதிப்படுத்தினார். அவர் பெயர் சுகிர்தராஜன். இதற்குப் பின்னர் சர்வதேச கண்டனக் குரல்கள் அதிகரித்தன.

இலங்கையில் நடக்கும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த அபாயவொலி உலகெங்கும் ஒலிக்கத்தொடங்கியது. சர்வதேச மன்னிப்புச் சபை “2006 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினாலும் பின்னர் 2011 இல் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவினாலும் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டபோதிலும் இதுவரை இது தொடர்பான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையானது சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறானதொரு விசாரணையை மேற்கொள்ள முடியாதுள்ளதை அல்லது நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் விருப்பங்கொண்டிருக்கவில்லை என்பதையே தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.” என அறிக்கைப்படுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை.

அமெரிக்க மிரட்டல் இலங்கை மேற்கொண்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை, சரியான மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தும் அமெரிக்காவும் இந்த ஐவரின் படுகொலையை கவனித்து வந்தது.

"திருகோணமலைக் கரையோரத்தில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை பாதுகாப்புப் படையினரே மேற்கொண்டதற்கான வலுவான சாட்சியங்கள் காணப்படுகின்ற போதிலும் கூட குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு உரிய நடவடிக்கையையும் இந்நாட்டு அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.” என்று வெளிப்படையாக போட்டுடைத்தார்.

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான வல்லுனர் ஜிம் மக்டொனால்ட் (2013). மனிவுரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை இலங்கை அரசு மேற்கொள்ளும் விசாரணைகளும், விசாரணைக்காக அமைக்கப்படும் குழுக்களும் நம்பகத்தன்மையற்றவை.

காலங்கடத்தும் கருவிகளாகவே அந்த விசாரணைக்குழுக்கள் காணப்படுகின்றன என்பதையும், மனித உரிமைகள் அமைப்புகள் இந்தப் படுகொலை விடயத்தை உதாரணப்படுத்தி சுட்டிக்காட்டியிருக்கின்றன.

“ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபை என்பன உள்ளடங்கலான பலவற்றில் திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முதன்மை இடத்தில் உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும் துரதிஸ்டவசமாக இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் திருகோணமலையில் 17 உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை போன்ற பிரபலமான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இனங்கண்டு நீதிமுன் நிறுத்தினால் இலங்கை அரசாங்கத்தை நம்புவதில் சிறிது நியாயம் உள்ளது. ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை என்பது கவலை தருகிறது" என்றார்.

மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் பிறட் அடம்ஸ். (2013) இந்த அழுத்தங்களின் விளைவினால், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட விசேட அதிரடிப் படையினர் 12 பேர் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி இவர்கள் அனைவரும் பிணையில் செல்ல திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது. இந்தப் படுகொலையை நேரில் பார்த்த சாட்சியாளர்களாக 36 பேர் பெயரிடப்பட்டிருந்தனர். அவர்களில் எண்மர் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நெருங்கிய உறவினர்கள்.

இந்த 36 சாட்சியாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் காரணமாக அவர்கள் அனைவருமே மௌனித்தனர். சாட்சியளிக்காமல் பின்வாங்கினர். நாட்டை விட்டு வெளியேறுமளவிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் விளைவாக குறித்த வழ்க்கிற்கு சாட்சியாளர்கள் அற்ற நிலை உருவாக்கப்பட்டது.

எனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 03 ஆம் திகதி குறித்த வழக்கினை எடுத்துக்கொண்ட திருக்கோணமலை நீதிமன்றம், “வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்று திருப்தியடையும் வகையில் சான்றாதாரங்களை முன்வைக்கவில்லை. அதனால் குற்றவியில் நடைமுறைக்கோவை 153 மற்றும் 154 ஆம் பிரிவுகளின் கீழ் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றாதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை.

எனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 13 எதிரிகளும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்” எனத் தீர்ப்பளித்தது. 13 வருட தாமதிப்பின் பின் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பானது அநீதிக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவுமில்லை.

குற்றவாளிகளைத் தண்டிக்கவுமில்லை. எனவே தாமதிக்கப்படும் நீதி இழைக்கப்படும் அநீதிக்கு சமனானது என்ற கோட்பாட்டுக்கு மிகச்சரியான உதாரணமாக திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை விவகாரம் மாறிவிட்டது.  

ஜெரா

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US