திருகோணமலை மீனவர் கைகலப்பு விவகாரம்: ஒருவருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை திருக்கடலூர்-விஜிதபுர மீனவர் கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு ICCPR குற்றச்சாட்டு குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்றைய தினம் (11.04.2023) குறித்த சந்தேக நபரை முன்னிலைப்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை- திருக்கடலூர் மற்றும் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் தலைமையக பொலிஸாரினால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரசியல் குடியியல் உரிமைகள் சட்டம்
திருகோணமலை மீனவர் கைகலப்பு சம்பவம்: ஒருவருக்கு விளக்கமறியல்! முதலாவது வழக்கில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களில் எட்டு சந்தேக நபர்களுக்கு இன்றைய தினம் ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருந்த போதிலும் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரான திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் பிரதீபன் (35 வயது) என்ற சந்தேக நபருக்கு எதிராகத் திருகோணமலை தலைமையக பொலிஸார் சர்வதேச மற்றும் அரசியல் குடியியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் 2007ஆம் ஆண்டு 56ஆம் இலக்க மூன்றாம் பிரிவின் கீழ் குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதவான் அறிவுறுத்தல்
இதே நேரம் குறித்த சந்தேக நபருக்குப் பல குற்றச்சாட்டுக்கள் போடப்பட்டிருந்த நிலையில் தேசிய இன ரீதியான அல்லது மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரம் உள்ளது எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், முழுமையான ஆதாரங்கள் போதுமானது அல்ல என நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு நியாயமான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும் நீதவான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
