திருகோணமலையில் கீழே தவறி விழுந்து இளைஞரொருவர் மரணம்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா, கிளிகுஞ்சுமலைப் பகுதியில் இளைஞரொருவர் கீழே விழுந்து மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா, கிளிக்குஞ்சுமலை பகுதியில் உள்ள கட்டிட பொருட்கள் விநியோகிக்கும் இடத்தில் மூவர் வேலை செய்து கொண்டிருந்த போது சக நண்பரொருவர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து இளைஞரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-கன்னியா புதுக்குடியிருப்பு,வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் அருண்குமார் (21 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மூவர் கட்டிட பொருட்கள் விநியோகிக்கும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேளை இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மற்றொருவரை தள்ளிவிட்ட போது விழுந்துள்ளதாகவும் இதனையடுத்து இவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் தெரியவருகின்றது.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சந்தேகத்தின் பேரில் அவருடன் வேலை செய்து கொண்டிருந்த 17 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.