திருகோணமலை - நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் எதிர்ப்பு
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கான வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன எனினும் உடைப்பு இயந்திரம் அப்பகுதியில் இருந்து இன்னும் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சேனையூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார முயற்சி
இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், “நாட்டின் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக எமது வாழ்வாதரத்தினை அழித்தொழிக்கும் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும்.
வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் மலைகளை உடைப்பதற்கு அனுமதி வழக்கியது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
“நாளாந்தம் கூலித் தொழிலையும், நெற்செய்கை, கால் நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதார முயற்சிகளை நம்பி வாழ்ந்து வரும் மக்கள் தான் இப் பகுதியில் உள்ளனர்
இவர்கள் குளம், வயல், காடு போன்ற வளங்களையே நம்பி வாழ்கின்றனர். மலையைச் சூழவுள்ள வயல்கள், மேய்ச்சல் தரை இயற்கைக் காட்டு வளம் என்பன கல்லுடைப்பால் அழிவுறும் அபாயம் ஏற்படும்” என்றும் சேனையூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மலையில் இந்து வழிபாட்டு அடையாளங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
