தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!
தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்று நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் காணப்படும் 70 கட்டில்களில் 52 கட்டில்களில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் கோவிட் நோயாளிகள் மத்தியில் ஒட்சிசனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது என மருத்துவ நிபுணர் அன்சர் அன்தானி தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதியாளர்கள் நேற்றைய தினம் 688பேர் பதிவாகியிருந்ததுடன், 7 மரணங்களும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 02 பெண்களும் 05 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், இதுவரை நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,218 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 597,035 ஆக அதிகரித்துள்ளதுடன், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
568,373 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.