நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியது!
இலங்கையில் கோவிட் தொற்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதுமான பயணக்கட்டுப்பாடு இன்றிரவு 11 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது, எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
25ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு பதினொரு மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீளவும் அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணத் தடை எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணத் தடை விதிக்கப்படும் காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது தேசிய அடையாள அட்டை முறை செயல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 27 மற்றும் 28ம் திகதிகளில், தம்புள்ளை, தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பட்டிபொல, வெயங்கொட, மீகொட மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் மருந்தகங்களுக்கு மாத்திரம் செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தமது வீட்டிற்கு அருகிலுள்ள மருந்தகங்களுக்கு மாத்திரமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.