தென்னிலங்கையில் பிரபல பாடசாலை மாணவிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்
காலியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் 12 வயதுடைய மாணவன் அருகிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகளை பிளேட்டால் வெட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 09, 12 மற்றும் 15 வயதுடைய நான்கு மாணவிகளே இவ்வாறு காயமடைந்துள்ளனர். மேலும் மாணவி ஒருவர் கைகளில் தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிளேட் ஒன்றை பாடசாலை ஆய்வு கூடத்திற்கு கொண்டு வருமாறு ஆசிரியர் மாணவர்களுக்கு கூறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய மாணவர்கள் பாடசாலைக்கு பிளேட் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையில் ஆய்வக நடவடிக்கைகள் முடிந்து பாடசாலையை விட்டு வெளியேறும் போது மூன்று மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவிகளை பிளேடால் வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாடசாலை நிறைவடைந்தவுடன் ஏனைய இரண்டு மாணவர்களும் அங்கிருந்து சென்றுள்ள நிலையில் ஒரு மாணவர் மாத்திரம் மாணவிகளின் கைகளை வெட்டியதுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.