மீன்களை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடும் வியாபாரிகள்
கிழக்கு கடற்கரையிலும் ஆமைகளும், டொல்பினும் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதால் மீனவர்கள் கடல் மீன்களை விற்க முடியாமல் திண்டாடுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடற்பகுதியில் சிலரால் மேற்கொள்ளப்படும் சுருக்கு வலை மீன்பிடிக்கு மத்தியில், தற்போதைய கோவிட் தாக்கத்தினால் நாடு முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் அன்றாடம் செய்துவரும் மீன்பிடித் தொழிலில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறோம்.
இச்சந்தர்ப்பத்தில் தமது கடற்பிராந்தியத்தில் கடல் ஆமைகளும், டொல்பினும் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவதனால் பெரிதும் மேலும் பாதிப்படைந்துள்ளதாக களுதாவளை, கல்லாறு, களுவாஞ்சிகுடி, உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல வருடக்கணக்காக இவ்வாறு கடலில் தொழில் செய்து வரும் இந்நிலையில் இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியதில்லை.
இது தென்மேற்கு கடற் பிராந்தியத்தில் அண்மையில் தீப்பற்றி எரிந்த என்.ரி.எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலிலிருந்து கடலில் கலந்துள்ள பொருட்களை கடல் வாழ் உயிரினங்கள் உண்டதனால் தான் இவ்வாறு அந்த உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றனவோ என எண்ணத் தோணுகின்றது.
இருந்தபோதிலும் துறைசார்ந்த அதிகாரிகளும், அரசாங்கமும் மக்கள் கடல் உணவுகளை உண்ணலாமா? உண்ண முடியாதா என்பதை உத்தியோகப் பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
ஏனெனில்
கடலில் பிடிபடும் சொற்ப மீன்களைக் கூட நாம் விற்பனை செய்ய முடியாதுள்ளோம்,
மக்கள் கொள்வனவு செய்வதற்கு அச்சமடைகின்றார்கள் என அப்பகுதி மீனவர்களும், மீன்
வியாபாரிகளும், அங்கலாய்க்கின்றனர்.