இன்றையதினம் கூடவுள்ள நாடாளுமன்றம்
இன்றையதினம்(18) கூடும் நாடாளுமன்றம் நாளையும்(19) கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று(17) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
மோசமான காலநிலை
டிசம்பர் 18ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன், ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.