வரவு செலவுத் திட்டம்! மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் இன்று
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் தொடர்பான குழு நிலை விவாதம் நேற்று தொடங்கியது.
குறித்த குழு நிலை விவாதத்தின் தொடர்ச்சி இன்று (28) இடம்பெறுவுள்ளதுடன் இது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு
இந்நிலையில், கடந்த அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 530 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (27) நடைபெற்ற விவாதத்தின் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் காலத்தில் ஆளும் கட்சி அமைப்பாளர்கள் 6 பேருக்கு மாத்திரம் 370 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புச் செலவினங்களுக்காக மாத்திரம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.