தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டது ஏன்? காரணம் வெளியானது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது இந்தியப் பயணம், பிற்போடப்பட்டமைக்கு இலங்கையின் நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமையும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் எமது செய்திப் பிரிவுக்கு தகவல் வழங்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிட தனிப்பட்ட காரணங்களும் இதில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமரின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் இந்த பயணத்துக்கான வாய்ப்பு குறித்து தெரிவிக்குமாறு இந்திய பிரதமர் தரப்பு கேட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே பயணம் ஒத்திவைப்பை கூட்டமைப்பு கோரியதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இந்தப் பயணத்தின்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவிருந்தனர்.
மாகாணசபை தேர்தலை அவசரமாக நடத்தவேணடும் என்ற இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலின் கீழ் கூட்டமைப்பின் இந்த பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.