விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் நல்லது தான்: முபாறக் அப்துல் (photo)
பிரபாகரனால் மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கூட முஸ்லிம்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவதை மறுப்பதற்கில்லை. அவர் உயிருடன் இருந்தால் நல்லது தான்.
ஜனநாயகம்
அதாவது இதுவரை காலமும் நன்றாக அனுபவங்களை அனுபவித்திருப்பார். போராட்டம் என்பது தற்போது சாத்தியப்படாது என ஒழிந்து இருந்திருப்பார்.
இப்படி ஒழிந்து பிரபாகரன் வாழ்ந்திருந்தால் அவருக்கு தான் அவமானம். அவர் அவ்வாறு திரும்பி வந்தால் ஜனநாயகத்திற்கு வந்து தேர்தல் கேட்டு நாடாளுமன்றத்திற்கு வாருங்கள் என கேட்பேன்.
முஸ்லிம் மக்களுக்கான தீர்வு
பிரபாகரனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ முஸ்லிம்களுக்கு எந்தவொரு தீர்வினையும் இனியும் பெற்று தரமாட்டாது என்பதும் எமக்கு தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட இதர கட்சிகள் கூட நாடாளுமன்றத்தில் இருந்தும் முஸ்லிம் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரபாகரன் இனி வந்து என்ன தர போகின்றார். அவராலும் அது முடியாது.
கட்டுக்கதை
நேதார்ஜி, அஸ்ரப் போன்றோர்களும் இறந்த போதிலும் இவ்வாறு அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என மக்கள் மத்தியில் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
அது போன்று தான் பிரபாகரனின் விடயமும் கதையாக வெளிவந்துள்ளது.
ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் ஒழிந்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.




