நாடாளுமன்றம் சபை அமர்வுகள் ஐக்கிய மக்கள் சக்தியினரால் புறக்கணிப்பு : திஸ்ஸ அத்தநாயக்க (VIDEO)
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதை ஏற்க முடியாது எனவே தான் எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை சபை அமர்வுகளை புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா வலப்பனை ஸ்ரீ தர்மராஜராமய விகாரையின் விகாராதிபதியை இன்று சந்தித்த திஸ்ஸ அத்தநாயக்க, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
நாடாளுமன்றம் எதிர்காலத்தில் வன்முறைக்களமாக மாறும் எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் செயற்படுவது, ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமது கருத்துகளை, நிலைப்பாடுகளை சுதந்திரமாக நாடாளுமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும்.
அந்த உரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதை ஏற்க முடியாது. எனவே தான், எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை சபை அமர்வுகளை புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
அதற்கான நடவடிக்கை எவ்வாறு இடம்பெறும் என்பதை கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானிக்கும்.
நாடாளுமன்றுக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை அரசாங்கம் தடுக்க தவறும்பட்சத்தில், எதிர்காலத்தில் நாடாளுமன்றமும் வன்முறைக்களமாக மாறும் அபாயம் உள்ளது என இதன்போது தெரிவித்துள்ளார்.