கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் விரட்டும் காலம் நெருங்கிவிட்டது! ரில்வின் சில்வா எச்சரிக்கை
அனைத்தையும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் வெகு விரைவில் கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“தற்போது இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் என எதுவுமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
நாட்டில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டும் என்ற நிலை உருவாகும் வேளையில் மக்கள் மேலும் மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், வெகு விரைவில் அரசாங்கத்தை விரட்டியடிப்பார்கள். ஆனால் இது கலவரமாக அமையாது, ஜனநாயக ரீதியில் மாற்றத்தை உருவாக்க முடியும். குறிப்பிட்ட சிலர் வீதியில் இறங்கினால் அரசாங்கத்தினால் அடக்குமுறையை கையாள முடியும். ஆனால் மக்கள் அலை வீதிக்கு இறங்கினால் அவர்களால் அடக்குமுறையை கையால முடியாது. இவ்வாறான நெருக்கடிகளில் மக்கள் பொறுத்துக்கொண்டு இருக்கப்போவதில்லை.
ஜனநாயக ரீதியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாமும் கூறுகின்றோம். மக்கள் ஒன்றாக வீதிக்கு இறங்கி ஆட்சி மாற்றத்தை கேட்பது ஜனநாயக செயன்முறையேயாகும். அதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. இதனை கிளர்ச்சி என அடையாளப்படுத்த வேண்டியதில்லை.
ஆட்சியை எமக்கு தாருங்கள் என நாம் கேட்கவில்லை, தலைமை ஏற்று சகலரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுபோவோம் என்பதே எமது அழைப்பாகும். சகல தரப்பும் ஒன்றிணைந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
இந்த வேலைத்திட்டத்தில் இனம், மொழி பாகுபாடு இன்றி சகலரையும் இணைத்துக்கொண்டால் மட்டுமே மீள முடியும். அதற்கு சகல மக்களும் தயாராக உள்ளனர்.
தலைமைத்துவமும், சரியான வேலைத்திட்டமுமே தேவைப்படுகின்றது. அதனை வழங்க நாம் தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.