வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து: மாணவன் உட்பட இருவர் படுகாயம் (Photos)
வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், மாணவன் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்றைய தினம் (23.04.2023) இடம்பெற்றுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் யாழ். ஐஸ்கிறீம் வீதியில் திரும்ப முற்பட்டபோது, அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மாணவன் மீது மோதியதுடன், எதிர்த் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
குறித்த விபத்தில் மாணவன் மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.













