சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் மூவர் கைது!
வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் பயணித்த மூவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று (15) மதியம் இடம்பெற்ற குறித்த கைது சம்பவத்தில், 40 ,21 ,28 ,வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது சம்பவம்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியான இஸ்மாயில் புரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் அதி சொகுசு கார் வழமைக்கு மாறாக அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளது.
இந்த கார் தொடர்பாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழு ஒன்று களவாடிய மோட்டார் சைக்கிளை ஈடு வைத்து அம்பாறை நகர் பகுதியில் வாகனம் வாடகைக்கு விடுகின்ற நிறுவனம் ஒன்றில் அதி சொகுசு கார் ஒன்றினை பெற்று அந்த கார் மூலம் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர், குறித்த காரில் சம்மாந்தறை பிரதேசத்திற்கு வந்து, இரவு முழுவதும் சுமார் 8 பேர் கொண்ட குழு போதைப்பொருள் பாவனையை மேற்கொண்டு வாடகை காரில் வழமைக்கு மாறாக அங்கு நடமாடி வந்துள்ளனர்.
பின்னர் அதி சொகுசு வாடகை காரை இஸ்மாயில் புரத்திலும் அதன் ரிமோட் சாவியை மலையடிக்கிராமத்திலும் வைத்திருந்த நிலையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் 3 பேர் கைதாகியுள்ளதுடன் ஏனைய 5 சந்தேக நபர்களும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் தொடர்பில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்பதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கொண்டள்ளதுடன் தப்பி சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடி கிராமம், வளத்தாப்பிட்டி , இஸ்மாயில் புரம், பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள் பயணம் செய்த அதி சொகுசு காரில் இருந்து ஹெரொயின் போதைப்பொருள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.