கிழக்கு மாகாணத்தின் வெவ்வேறு இடங்களில் மூவர் சடலமாக மீட்பு (Video)
மட்டக்களப்பில் உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (02.10.2022) மாலையளவில் நடந்துள்ளது.
நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த விஷ்ணுகாந் விதுஷனன் (வயது 16) மற்றும் மனோகரன் கண்ணதாசன் (வயது 33) ஆகியோரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதன்போது விஷ்ணுகாந் விதுஷனன் நேற்று (02.10.2022) சடலமாக மீடக்கப்பட்ட நிலையில் மற்றையவர் இன்று (03.10.2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருதில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (03.10.2022) நடந்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையினருடன் இணைந்து கடலில் மிதந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
எனினும் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்கியிருந்தால் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர்.
செய்தி: ராகேஷ்