காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள குறித்த வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது 36 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிகிராமும், 38 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிகிராமும், 39 வயதுடைய ஒருவரிடம் 110 மில்லிகிராமும் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் நாளாந்தம் போதைப்பொருள், கஞ்சா, கசிப்புடன் சந்கேதநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.