வவுனியாவில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில தினங்களாகத் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்த வகையில் கடந்த 30 ஆம் திகதி வவுனியா, இலங்கை வங்கி விடுதியில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றிருந்தனர்.
அத்துடன், கடந்த முதலாம் திகதி தேக்கவத்தையில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டியையும், 8 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றிருந்தனர்.
மேலும், நேற்றைய தினம் வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த டிவிடி பிளேயர் மற்றும் முக்கால் பவுண் தோடு என்பவற்றைத் திருடிச் சென்றிருந்தனர். குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடுவின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஜயவர்த்தன தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மதவுவைத்தகுளம், கற்குழி, தேக்கவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39, 28, 24 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.