மன்னார் இளம் குடும்ப பெண் சிந்துஜா மரணம் தொடர்பில் மூவர் கைது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (9) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த வருடம் ஜூலை மாதம் 28 திகதி உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.
இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் (9) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.



