ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம்
ஈழத் தமிழர்கள் தமது இறைமையை இழந்து 404 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் 1621 யாழ்ப்பாண இராச்சியத்தின் நந்திக்கொடி வீழ்த்தப்பட்டு போர்த்துக்கேயர்களின் கொடி யாழ்ப்பாணத்தில் பறந்ததைத் தொடர்ந்து தமிழர் தாயகம் படிப்படியாக ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தின் கீழ் சென்று விட்டது.
ஐரோப்பிய ஆதிக்கம் முடிவடைகின்ற 1900ஆம் ஆண்டின் ஆரம்ப நிலையில் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெறுவதற்காக பிரித்தானிய குடியேற்றவாத காரியதரிசிக்கு சேர் பொன் ராமநாதன், அருணாசலம் மற்றும் பொன்னம்பலமும், சுந்தரலிங்கமும் எழுதிய கடிதங்கள் "ஒளிக்க தெரியாதவன் உடையார் வீட்டில் ஒளித்த" கதையாகிப் போனமை போல இப்போதும் ஐநா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு தாயகத்தில் இருந்தும், புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்தும் ஈழத் தமிழர்கள் கடிதம் எழுதுவது தொடர்கிறது.
எம்மை யார் அடக்கி அழிக்கிறானோ அவனிடமே நியாயம் கேட்பதும், நீதிக்காக விண்ணப்பம் கோருவதும் எவ்வளவு அறிவீனமோ அப்படித்தான் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களை ஒடுக்குவது என்று முடிவெடுத்து சிங்கள தலைவர்களோடு கூட்டிச்சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருந்தபோது அதனை அறியாமல் அதே பிரித்தானியரிடம் நீதி கேட்டு, நியாயம் கேட்டும் அன்றைய தமிழ் தலைவர்கள் கடிதம் எழுதி தமிழ் மக்களுக்கு உரிமை பெற விண்ணப்பம் மற்றும் கோரிக்கை விடுத்தமை கனவான் பேச்சுக்களில் ஈடுபட்டமை ஒருதனி ஏமாற்ற வரலாறு.
இன்று வரை கல்வி கற்றவர்களிடம்
1900ஆம் ஆண்டு வரையான 300 ஆண்டுகள் தமிழர்கள் அரச பாரம்பரியத்தை இழந்தமையும், ராஜதந்திர செயலாற்றல் அறுந்து போனமையும், காலனித்துவ கல்விமுறை என்பனவும் தமிழ் தலைவர்களை ராஜதந்திர ரீதியில் சிந்திக்கவும், தொழிற்படவும் தடையாக அமைந்துவிட்டன.
அதுவே ஆயுதப் போராட்டத்திலும் சரி, அகிம்சை போராட்டத்திலும் சரி, முள்ளிவாய்க்கால் பேராவலத்துக்கு பின்னாயினும் சரி தமிழர்களை அரசாக சிந்தித்து தேசமாக தொழிற்படவும் தடையாக அமைந்து விட்டது.
நீண்ட காலனித்துவ ஆட்சி முறையின் கீழ் புகுத்தப்பட்ட கல்வி முறையானது தமிழ் மக்களை காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்கின்ற வகையிலேயே வகுக்கப்பட்டது.
இந்தக் கல்வி முறையின்கீழ் கற்றவர்களின் மூளையில் நல்ல சேவகர்களாக தொழிற்படும் கருத்து மண்டலத்தை உருவாக்கிவிட்டது.
அந்தக் கல்வி முறையினால் மூளையில் திணித்த கருத்து மண்டலமே தமிழ் தலைவர்களை தர்க்கபூர்வமாக சிந்திக்கவும், தத்துவார்த்த ரீதியில் பிரச்சினைகளை அணுகவும் தடையாகவும் அமைந்துவிட்டது.
அந்தக் கருத்து மண்டலமே தொடர்ந்தும் இன்று வரை கல்வி கற்றவர்களிடம் வியாபித்து உள்ளது. சிங்கள பேரணவாதத்திடமிருந்து விடுதலை பெற துடிக்கும் தமிழ் மக்கள் வெள்ளையர்கள் நல்லவர்கள் என்றும், அவர்கள் நீதிமான்கள் என்றும், அவர்கள் ஜனநாயக வாதிகள் என்றும் நம்பும் கருத்து மண்டலத்திலிருந்து முதலில் விடுதலை பெற வேண்டும்.
ஐ.நா நோக்கிய அரசியல் நகர்வு
மேற்குலக சேவக மேன்மை கருத்து மண்டலத்தை நிராகரித்து கிழத்தைய பண்பாட்டிற்கும் நடைமுறைக்கு பொருத்தமான கருத்து மண்டலத்தை தமிழ் மக்களிடம் உருவாக்காவிடில் தமிழ் மக்களை தமது இறைமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
இலங்கை தீவில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையையே அரசியல் சித்தாந்தமாகவும், அரசியலமைப்பாகவும், அரசியல் திடசங்கர்ப்பமாகவும், அரசியல் கருத்து மண்டலமாகவும் கொண்டிருக்கும் சூழலில் ஈழத் தமிழர்களுக்கான நீதியை கோரி சர்வதேச அரங்கில் போராடுவது என்பது இலகுவானது ஒன்று அல்ல.
அதுவும் அரசற்ற தமிழ்த் தேசிய இனம் கட்டமைக்கப்பட்ட தொடர் பரம்பரிய வளர்ச்சிக்குட்பட்ட இனவாத அரசோடு மோதுவது மாத்திரம் அல்ல அதற்கு எதிராக சர்வதேச அனுசரணையை தமிழ் மக்களுக்கு சார்பாக திருப்புவது என்பதும் இலகுவானது ஒன்று அல்ல.
இரண்டாவதாக ஐநா நோக்கிய அரசியல் நகர்வு என்ற அடிப்படையில் ஐநா என்கின்ற உலகப் பொது மன்றத்தில் 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமை ஆணையம் என்பது பற்றிய சரியான அரசியல் தத்துவார்த்த புரிதல் தமிழ் மக்களுக்கு அவசியமானது.
ஐநா என்கின்ற பொது மன்றம் கடந்த 76 ஆண்டுகளில் உலகம் தழுவிய அரசியலில் அடக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்கவில்லை.
விடுதலைக்காக போராடுகின்ற அல்லது ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்காண தீர்வுகள் எதனையும் அது முன்வைத்து நடைமுறைப்படுத்தவில்லை என்ற வரலாற்றை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
உலகளாவிய தேசியஇன விடுதலையில் தேசிய இனங்கள் பலம் வாய்ந்த நாடுகளின் அணுசரனையோடும், ஆதரவேடுமே தமது விடுதலையை சாத்தியமாக்கிய போது மாத்திரமே ஐநா பொது மன்றம் அங்கு தனது பாத்திரத்தை வகித்திருக்கிறது.
தவிர பலம் பாய்ந்த நாடுகளின் தலையீடுகள் இன்றி ஐநா தனித்துவமாக எதனையும் இன்றுவரை சாதிக்கவில்லை.
அவ்வாறே ஐநாவில் மனித உரிமைகளுக்கான UN Commission on Human Rights (CHR) உப அமைப்பு எதனையும் சாதிக்கவில்லை.
இதற்கு எம் கண்முன்னே பாலஸ்தீனியர்களின் அழிவின் தொடர் கதை சாட்சியமாக உள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு
இந்த நிலையில்தான் 21ம் நூற்றாண்டில் UN Commission on Human Rights (CHR) தேசிய இனங்களின் விடுதலை சார்ந்து எழுந்த மனித உரிமைகளுக்கான போராட்டங்களும் குரல்களும் சர்வதேச அபிப்பிராயமும் புதிய பானையில் பழைய கஞ்சியை காட்ட வேண்டிய சூழலை தோற்றுவித்தது.
அதே நேரம் சர்வதேச பயங்கரவாதம் என்ற உலகளாவிய பொதுச் சட்டத்தின் கீழ் தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்களில் ஏற்பட்ட மனித உரிமைகள் சிக்கலுக்குள்ளாகி இருக்கின்ற சூழலில் தேசிய இனங்களை விடுதலை சார்ந்து எழக்கூடிய மனித உரிமை மீறல்கள் மனித உரிமை சார்ந்த விடயங்களை கவனிப்பதற்காகவும் அதே நேரத்தில் தேசிய இன விடுதலையை மட்டுப்படுத்தி பாதிக்கப்பட்ட இனங்களின் அழுகைகள், கூக்குரல்கள்ஈ துன்ப துயரங்களுக்கான வடிகாலாகவும் அவர்கள் தமது இயலாமையை வெளிப்படுத்துவதற்கு ஒப்பாரி வைக்கக் கூடிய ஒரு தளம் தேவைப்பட்டது.
அத்தகைய ஒரு ஒப்பாரி மண்டபமாகவும் அதே நேரம் அங்கு வந்து முறையிடுகின்ற தேசிய இனங்களுக்கான ஒரு உளவளப்படுத்தலை மேற்கொள்வதற்கான ஒரு அமைப்பாகவுமே ஐநா மனித உரிமைகள் ஆணையம் (UN Human Rights Council) என்பது உருவாக்கப்பட்டது என்று சொல்வதே சாலப்பொருத்தம்.
எது எப்படியோ உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கென்ற மனித உரிமை ஆணையம் இன்று 47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
இந்த உறுப்பினர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆகியவற்றில் இருந்து தேர்வு தெரிவு செய்யப்பட்டு மனித உரிமை சார்ந்த விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
ஆயினும் இந்த அமைப்பில் அரசியல் பாகுபாடுகள், அணி சார்புகள், மற்றும் செயல் திறன் குன்றிய குட்டி நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
அதுமட்டுமல்ல மனித உரிமைகளை மீறுகின்ற நாடுகளும் உறுப்புரிமை பெற்றுள்ளன என்பதிலிருந்து இந்த மனித உரிமை ஆணையத்தின் செயற்பாட்டை எடை போட முடியும்.
இந்நிலையில்த்தான் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டார்.
அவருடைய பயணத்தில் யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித படுகொலை புதைகுழி தோண்டும் பணியையும் பார்வையிட்டு சென்றார் என்பது தமிழ் மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.
ஆயினும் அவர் கொழும்பில் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுடன் பேசுகின்றபோது நம்பிக்கை ஊட்டக்கூடிய உள்ளக பொறிமுறைக்குள் நீதி விசாரணை நடத்துவது பற்றியே பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதிலிருந்து ஐநா ஒப்பாரி மண்டப நாட்டாமையார் தமிழ் மக்கள் சார்பாக எத்தகைய கொள்கையை இப்போது கொண்டுள்ளார்? கடைப்பிடிப்பார்? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கை தீவுக்குள் பௌத்த மகாசங்கங்கள்
இலங்கையின் அரசியல் சூழமைவு என்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை கலாசாரத்தைக் கொண்டுள்ளது.
சிங்கள சமூகவியலிலும், சிங்கள பொது புத்தியிலும், கல்விமான்களின் உடைய கருத்து மண்டலத்திலும், அரசியல் தரப்பினுடைய கருத்தியலிலும், சிங்கள ஊடகங்களின் கருத்தியலிலும், பௌத்த மகா சங்கத்தினரும் இலங்கையின் அரசியலமைப்பிலும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையே அதன் தத்துவார்த்தமாக அதன் அடிநாதமாக உள்ளது.
இந்த நிலையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைக் அடிப்படையாக கொண்ட மகாவம்சத்தை புனித நூலாகக் கொண்டு அதனையே நடைமுறைப்படுத்துகின்ற அரசியல் சமூக சூழல் நிலவும் இலங்கை தீவுக்குள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இனத்திற்கான நீதியைப் பெறுவதற்கு உள்ளக சுயாதீன நீதி விசாரணை பொருத்தமா என்பது கவனத்திற்குரியது.
இலங்கையை பொறுத்த அளவில் இலங்கைத் தீவுக்குள் இனவாத அரசும், அதனுடைய நீதி நிறுவனங்களும், அரச கட்டுமான நிறுவனங்களும் எப்போதும் அரசுக்கு சார்பாகவும் அதே நேரம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதரவாகவும் இனப்படுகொலையைச் செய்யும் நிறுவனமாகவே தொழில்படுகின்றன.
இந்த அடிப்படையில் கொலையாளியிடம் நீதி கேட்பது என்பது மான் சிங்கத்துடன் விருந்துக்கு அழைப்பதாகவே அமையும். மான் சிங்கத்தை விருந்துக்கு அழைப்பது என்பது சிங்கத்துக்கு விருந்தாக அமைவதாகவே அமையும்.
எனவே இலங்கை தீவுக்குள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய எந்த ஒரு பொறிமுறையும் நடைமுறைக்குச் சாத்தியமற்றது.
அவ்வாறு ஒரு நீதிபதி முறை இயங்குவதற்கு இலங்கை தீவுக்குள் பௌத்த மகாசங்கங்கள் மற்றும் ஊடகங்கள், இனவாத கல்விமான்களும், அரசியல்வாதிகளும் தடையாகவே இருப்பர்.
அவர்கள் எத்தகைய ஒரு நீதிப் ஒருமுறை மீது அழுத்தத்தை பிரயோகிக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் தயங்க மாட்டார்கள். தமிழின அழிப்பு கட்டமைப்பு வாதத்துக்கு உட்பட்டிருக்கும் இலங்கை தீவுக்குள் எந்த ஒரு நீதி விசாரணையும் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் இயங்க முடியாது மாத்திரமல்ல அது தமிழ் மக்களுக்கான நீதியையும் வழங்காது.
தமிழ் மக்களை பொறுத்த அளவில் சர்வதேச சுயாதீன நீதி விசாரணை ஒன்றே தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும். இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வேண்டி விண்ணப்பங்கள், கோரிக்கைகள், மனுக்கள் கொடுக்கப்பட்ட காலங்களில் பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட மனிங், டொனமூர், சோல்பெரி பிரபுக்கள் தமிழ் மக்களுக்கு எத்தகைய அரசியல் உரிமைகளை வழங்கினார்கள் என்பதனை வரலாறு நிரூபித்திருக்கிறது.
ஆகவே தமிழ் மக்கள் வெள்ளை இன கணவன்களை நம்புவதில் எந்தப் பயனும் கிடையாது. பரஸ்பர நலன்கள் சந்திக்கும் புள்ளியிலேயே உறவுகள் மலரும்.
தமிழ் மக்களுக்கான அரசியல்
இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் வாழும் தாயகத்தின் கேந்திர ஸ்தானத்தின் பெறுமானத்தின் அடிப்படையில் மேற்குலகத்தின் நலங்களும் எமது தாயக அமைவிடம் சார்ந்து அவர்களுக்கு இருக்கின்ற தேவைகளும் அந்தத் தேவைகளை எமது நலன்களோடு பொருத்தி இரண்டு நலன்களும் சந்திக்கின்ற சந்திப்புள்ளியில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் மத்தியில் நுண்மா நுழை புலன் மிக்க அரசியல் தலைமைகள் உருவெடுக்காவிடினும் அரசறிவியல் துறையில் தீர்க்க தரிசனமாக கருத்துரைக்கக்கூடிய அரசியல் அறிஞர்கள் இல்லாமல் இல்லை.
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்ற பாரம்பரியம் தொடர்ந்தும் தமிழ் மக்களிடம் உண்டு. எனவே அரசறிவியல் அறிஞர்களோடு அரசியல் தலைமைகள் கை கொடுக்காமல் தமிழ் மக்களுக்கான அரசியல் அவிலாசைகளை நோக்கிய பயணத்தை தொடர முடியாது.
இந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாக இன்னும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கான பேச்சுக்கு அனைத்து கட்சிகளையும் சமூக பிரதிகளையும் கல்விமான்களையும் அரசரவியலாளர்களையும் கடந்த ஜூலை 20ம் திகதி யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் அச்சந்திப்பை நடத்தி முடித்து இருந்தார்.
உலக ஒழுங்கு, உலக முறைமை என்ற அடிப்படையில் ஐநா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு தமிழ் மக்கள் கடிதம் எழுதுவது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாததுதான்.
ஒரு நடைமுறைக்காயினும் கடிதங்கள் எழுதப்பட வேண்டும் என்பதும் நிர்பந்தம்தான். நாம் சரியாக நடப்பது மாத்திரம் போதாது சரியாக நடக்கிறோம் என்பதை நம்பப்படவும் வேண்டும்.
ஆகவே தமிழ் மக்கள் ராஜரீக நடவடிக்கைகளுக்கான ஜனநாயக முறை தழுவிய கடிதங்களும் முறைப்பாடுகளும் எழுத்து மூலமாக ஐநாவுக்கு அனுப்புவது அவசியமான நடைமுறைதான்.
அதற்காக நாம் அனுப்பும் கடிதங்களும், விண்ணப்பங்களும் அவர்களின் மனதை திறந்து விடும், அல்லது அவர்களிடம் நீதியை ஊற்றெடுக்க செய்துவிடும் என்று நம்புவது அரசியல் ராஜதந்திர அறிவின்மையே வெளிப்படுத்தும்.
தமிழ் மக்களை ஒன்று கூட்டுவதற்கான இத்தகைய சந்திப்புகள் அவசியமானதுதான். சரியோ தவறோ,பலன் அளிக்கிறதோ இல்லையோ, செயற்பாடுகள் மந்தகதியோ, என்னவாயினும் தமிழ் மக்களின் பிரமுகர்களை ஒரு மேசையில் அமர்த்துவது என்பது இப்போது மிகக் கடினமாகி போய்விட்டது.
ஆயினும் குறிப்பிட்ட அளவானவர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு மேசையில் அமர்த்தியது என்பது வரவேற்கத்தக்கது.
இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து தேவையாகவே உள்ளது. அதுவே தமிழ் தேசியம் என்ற ஒரு கட்டுமானத்துக்கும், தமிழ் தேசியம் என்ற உணர்வுக்கும், செயற்பாட்டுக்கும் வழிவகுக்கக் கூடியது.
ஆயினும் இந்தக் கூட்டத்தில் தமிழரசு கட்சி புறக்கணித்தது என்பது தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளுக்கான அரசியலில் அவர்களை எத்தகைய பாத்திரத்தை எதிர்காலத்தில் வைக்கப் போகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
மேற்படி மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசுடன் ஒத்துப் போகின்ற அல்லது இலங்கை அரசை தயார் பண்ணுகின்ற சமாளிப்புகளில் ஈடுபட்டு இலங்கை அரசு சீனச் சார்பின் பக்கம் செல்வதை தடுப்பதற்கான ஒரு உத்தியாக உள்ளகப் பொறிமுறையை ஏற்கின்ற ஒரு நிலைக்கு செல்வதற்கான அறிகுறிகள் இப்போது தென்படுகிறது.
அது எதிர்வரும் மனித உரிமை சபை கூட்டத் தொடர்களும் எதிரொலிக்க கூடும் இதனை எதிர்கொள்வதற்கேற்ற ராஜதந்திர நடவடிக்கைகளை விரைவாக தமிழ் மக்கள் எடுக்க வேண்டியது அவசியமானது.
மேற்குலக நாடுகளுக்கு அனுசரணையாக
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் உலகளாவிய அரசியலிலும் சரி, உலக அரசியலிலும் சரி, ஐநா பொது மன்றங்களும் சரி அனைத்தும் அவரவர் நலன்களை மையப்படுத்தியே தொழிற்படுகின்றன.
இங்கே நலன்களை முக்கியம் பெறுகின்றன. ஐநாவைப் பொறுத்தளவில் பலம் வாய்ந்த மேற்குலக நாடுகளுக்கு அனுசரணையாக இருக்க வேண்டியது அதனுடைய நிற்பந்தம்.
பலமாய்ந்த நாடுகளின் நிதி உதவியுடனேயே ஐநா தொழிற்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு சேவகம் செய்யும் ஒரு மன்றமாக மாத்திரமல்ல அது அரசுகளுக்கான அமையமுமாகும்.
அரசுக்கும் அரசுக்குமான தொடர்புகளை பேணுவதும் அரசுகளுடைய நலனை பேணுவதுமே ஐநாவின் முதன்மை காரியமாக உள்ளது.
ஆகவே அரசற்ற இனங்கள் ஐநாவில் ஆளுமை செலுத்தவோ அல்லது அணுசரணையை பெறுவது என்பது முடியாத காரியம். இங்கே அரசு அற்ற தமிழ்த் தேசிய இனம் வல்லரசுகளின் அணி சாராமல், வல்லமை வாய்ந்த அதாவது சக்தி வாய்ந்த நாடுகளின் அனுசரணை இன்றி, பிராந்திய சக்திகளின் ஆதரவின்றி ஐநாவிலோ அல்லது ஐநாவின் மனித உரிமை ஆணையத்திலோ தமிழ் மக்களுக்கு சார்பான ஒரு கருத்தையோ, முன் மொழிவையோ, அல்லது ஒரு தீர்வையோ பெற்றுவிட முடியாது.
இவ்வாறு தமிழ் மக்கள் வல்லரசுகளோடு அணிசேர்வதற்கும் பேசுவதற்கும் ஏற்ற அரசியல் சக்தி அல்லது ராஜதந்திர உரையாடல் அவசியமானது.
அத்தகைய உரையாடலுக்கு செல்வதற்கு முதலில் நாம் எம்மை தயார் படுத்த வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் சக்தியை கூட்டுக்கட்டி ஒன்று திரண்ட சக்தியாக பலப்படுத்தினால் மாத்திரமே வல்லமை வாய்ந்த நாடுகளுடன் ஒரு ராஜதந்திர உரையாடலை தொடங்க முடியும்.
அதற்கான தருணம் இப்போது அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகிறது. நாம் மனித உரிமை ஆணையம் என்கின்ற ஒப்பாரி மண்டபத்தை தொடர்ந்து நம்ப முடியாது என்பதை இந்த மாதம் ஐநா மனித உரிமை ஆணையாளர் உலகப் பொதுமுறை விசாரணைக்கான சாயலை வெளிப்படுத்தியதில் இருந்து நாம் சுதாகரித்துக் கொள்ள வேண்டும்.
இனப்படுகொலைக்கான தீர்வு
தமிழ் அரசியல் தலைமைகளிடம் போர்க்குற்றம்(War Crimes), மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் (Crimes Against Humanity), இன அழிப்பை (Genocide) என்ற மூன்று வகையான சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மூன்று வகையான சொல்லாடல்களையும் நாம் தத்துவார்த்த ரீதியிலும் இன்றைய அரசியல் சூழலிலும் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற அடிப்படையில் தொழிற் பட வேண்டும்.
இங்கே போர் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் சென்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படுமானால் அதற்கான நீதிப் ஒருமுறை என்பது குற்றத்தை இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதோடும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு நீதி என்பவற்றோடு நின்று விடும். போர் குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்பவற்றை முன்னிறுத்தி ராஜபக்சக்களையோ, அல்லது படைத்த படைத்தரப்பினரையோ, ராணுவ தளபதிகளையோ தண்டிப்பதால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
தமிழர்கள் படுகொலையாளிகளை பழி தீர்ப்பதற்காக போராடவும் இல்லை. தமது தேசிய அபிலாசையான இறைமையை மீட்பதற்காகவே போராடினார்கள் அதுவே எமது இலட்சியம்.
நாம் எப்போதும் இலட்சியத்தின்பால் நிற்க வேண்டுமே தவிர தனிப்பட்ட குரோதங்களோ அல்லது தனிப்பட்ட பழி தீர்ப்புக்களுக்காகவோ நாம் போராடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனப்படுகொலைக்கான தீர்வு என்பது அந்த இனம் பிரிந்து சென்று தனியரசை அமைப்பதுதான். ஆகவே தமிழ் மக்களை பொறுத்த அளவில் பெரும் இனவழிப்புக்கு உட்பட்ட தேசிய இனம் என்ற அடிப்படையில் இன ஒழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை ஒன்றையே கோர வேண்டும்.
அதையே அனைவரும் வலியுறுத்தி போராட வேண்டும். தமிழ் மக்கள் போராடினால் தான் உண்டு வாழ்வு. அதுவே தமிழ் இனத்தை இந்த பூமி பந்தல் தொடர்ந்து வாழ வைப்பதற்கான வழிவகையாகவும் அமைய வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 06 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 1 மணி நேரம் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
