யாழ்.நெடுந்தீவில் காணி உரிமம் மாற்றுவதில் மோசடி! முன்னாள் தவிசாளர் கைது
யாழ்.தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் மோசடிக்கு துணை நின்ற முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் நேற்றையதினம் (23.04.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 சகோதரர்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணை முறைப்பாடு
இதேவேளை வெளிநாட்டில் வசிக்கும் மற்றைய சகோதரர் ஒருவர் பங்கு ஆதனம் சட்டத்துக்கு புறம்பாக மோசடியாக விற்பனை செய்துள்ளமையை அறிந்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற முன்னிலை
அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியாக ஆதனத்தை உரிமம் மாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நல்லதம்பி சசிகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோசடியாக முடிக்கப்பட்ட உறுதிக்கு சாட்சிக்கையொப்பமிட்ட முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஒருவரும் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் இன்று (24.04.2023) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.