முள்ளிவாய்க்கால் வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (Photos)
தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் பொலிஸாரும் காவல் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குத் திரும்பும் சந்தியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு சென்ற ஊடகவியலாளர் நினைவுமுற்றத்தை காணொளிப்பதிவு செய்ததன் பின்னர் திரும்பிச் சென்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குத் திரும்பும் சந்தியில் நின்ற பொலிஸார் இராணுவ புலனாய்வாளர்களின் தூண்டுதலின் பெயரில் ஊடகவியலாளரை மறித்துள்ளனர்.
ஊடகவியலாளர், ”எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்டபோது எந்தவித பதிலையும் சொல்ல முடியாது நின்ற பொலிஸார் சிறிது நேரத்தில் ஊடகவியலாளரின் அடையாள அட்டையைக் கோரியுள்ளனர்.
அடையாள அட்டையை வழங்கிய ஊடகவியலாளர் ஏன் என்று கேட்டபோது, காணொளி எடுத்தீர்களா எனக் கோரி தங்களுடைய பதிவேடு ஒன்றில் விபரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் பொலிஸாரின் உடையை இந்த செயற்பாடுகள் தொடர்பில் காணொளிப் பதிவு செய்ய முயன்ற போது உங்களுடைய வாகனத்தின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்களைக் காண்பிக்குமாறு பொலிஸார் கோரி அவற்றையும் வாங்கி பதிவுசெய்து அனுப்பியுள்ளனர்.
ஊடகவியலாளர் அவ்விடத்துக்கு செல்லும்போது அங்கு இராணுவ புலனாய்வாளர்கள் பொலிஸாருடன் கலந்துரையாடிய வண்ணம் இருந்ததாகவும் அவர்களுக்குத் தகவல்களை வழங்கவே பொலிஸார் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில், மக்களை அச்சமடையச் செய்யும் நோக்குடன் பொலிஸார் அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் ஒரு அங்கமாகவே குறித்த பகுதிக்குச் சென்றுவந்த ஊடகவியலாளரை மறிந்த
பொலிஸார் ஊடகவியலாளரிடம் ஆவணங்களைக் கோரி ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில்
பதிவு செய்ததன் ஊடாக குறித்த தகவல்களை புலனாய்வாளர்களும் இராணுவத்தினருக்கும்
வழங்குவதற்காகவே பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் இராணுவத்தினர், புலனாய்வாளர்கள்
விபரங்களைப் பெற்றால் அது பிரச்சினையாக வரும் என்பதால் அவர்களின் எடுபிடிகளாக
பொலிஸார் செயற்படுவதாக குறித்த ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.