ஆலையடிவேம்பு பகுதியில் யானை அச்சுறுத்தல்: ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்! (Photos)
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் யானையின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (08.03.2023) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர், அரச உயர் அதிகாரிகளுக்கும், வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்டவர்களுக்கும் கையளிக்கும் வகையிலான மகஜர்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் ஒப்படைத்து, தங்களுக்குரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிரினங்கள் உடைமைகள் துவம்சம்
மகஜர்களை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதேநேரம், கண்ணகி கிராமத்தில் நாளாந்தம் யானையின் தாக்குதல் இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் அதிகாலையும் (09.03.2023) விவேகானந்தன் ஜெகதீஸ் என்பவரது வீட்டை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.
அத்தோடு, இரு தினங்களுக்கு முன்னர் கண்ணகி கிராமத்திலும் தனது அட்டகாசத்தினை காட்டிய யானை அங்குள்ள குடியிருப்புக்களையும் பயிரிடப்பட்ட பயிரினங்களையும் உடைமைகளையும் துவம்சம் செய்துள்ளது.
இதேநேரம், அண்மைக்காலமாக கவடாப்பிட்டி புளியம்பத்தை மகாசக்திபுரம் கண்ணகி கிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருவதானால் அங்கு வாழும் மக்கள் தூக்கத்தைத் தொலைத்து வீதிகளில் அலைவதுடன், விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
ஒற்றைக்கண் யானை
இது இவ்வாறிருக்க, சில மாதங்களுக்கு முன்னர் கண்ணகி கிராமத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் பலியானதுடன், வயல் பிரதேசத்தில் தாக்கப்பட்ட ஆண் ஒருவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும் அரசாங்கமோ எந்த அரசியல்வாதிகளோ இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், தொடர்ந்தும் யானையின் அச்சுறுத்தல் இடம்பெற்று வருவதுடன், ஒற்றைக்கண் யானை ஒன்றே இவ்வாறு தொடர் சேதங்களை ஏற்படுத்தி வருவதாகப் பொதுமக்களும் கூறுகின்றனர்.
ஆகவே, குறித்த யானையினை வெளியேற்ற அரசாங்கமும் அரச அதிகாரிகளும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இல்லாத பட்சத்தில் தாங்கள் தொடர்ந்தும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.