தனிமைப்படுத்தப்படுபவர்கள் பயப்பட தேவையில்லை! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு
கொரோனா தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 1284 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.மதன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் தொற்றாநோய்கள் கொண்ட நபர்கள் பிரத்தியேகமாகக் கவனிக்கப்படுவதாகச் சிகிச்சை நிலைய மருத்துவர் எஸ்.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி,
தற்போதைய நிலையில் டெங்கு நோய்த் தொற்று நிலைமை யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலே காணப்படுகின்றது.
எனினும் தற்போது மழை பெய்ததன் காரணமாக நீர் தேங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமிடத்து டெங்கு நோய் தாக்கத்திலிருந்து யாழ் மாவட்டத்தினை பாதுகாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.