பிரதமராக பதவியேற்றதன் காரணம் இதுதான்! ரணில் தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட விடயம்
மக்களுக்கு உதவவும், ராஜபக்ச ஆட்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்றவுமே பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப எவரும் முன்வராத நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான விக்ரமசிங்க கடினமான பணியை மேற்கொண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை அனைவரும் விமர்சிக்க வேண்டும் எனவும், எனினும் விமர்சனங்களால் மாத்திரம் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் பாரிய பணியை முன்னெடுத்துள்ளதாகவும், எனவே நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைத்து தரப்பினரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் பிரதமர் விக்ரமசிங்க வெற்றியடைவார் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இது அனைத்து இலங்கையர்களுக்கும் வெற்றியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.