தொழில்முனைவோரை தற்போதைய அரசாங்கம் ஏமாற்றிவிட்டது: திலித் ஜயவீர
நாட்டின் தொழில்முனைவோரை தற்போதைய அரசாங்கம் தவறான வழியில் வழிநடத்தி ஏமாற்றி வருவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளித்த குழுக்களையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜயவீர இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நம்பி, பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இந்த அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்த போதிலும், தொழில்முனைவோர் இன்னும் தொடர்ச்சியான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, வெற்றிகரமாக இயங்கி வரும் சில உள்ளூர் வணிகங்களுக்கு எதிராக உள்ளூர் அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் நியாயமற்றவை என தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அமெரிக்காவின் விசாரணை முடிவுகளுக்கு தற்போதைய அரசாங்கம் அளித்துள்ள பதில் தனக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 5 அமெரிக்க பிரஜைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது சொந்த விசாரணையை நடத்தி, அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விசாரணை தொடர்பாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் நடத்தப்படும் விதம் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கேள்வி எழுப்பியுள்ளார்.