இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம்! இரா.சாணக்கியன்
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே கொங்கிறிட் பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தினை பலப்படுத்துவதுடன் உண்மையான அபிவித்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கண்டறியும் வகையில் இன்று மாலை அப்பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கூழாவடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளான பேரிலாவெளி, கக்கிளாசோலை. பெரியவெட்டுவான் ஆகிய பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் ஆராயவே நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
குறிப்பாக குறித்த பகுதியில் தினமும் யானைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.யானைகளின் அட்டகாசம் காரணமாக சொத்துகள் நாசமாவதுடன் உயிர் அச்சுறுத்தலும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் திலீபன் ஞாபகார்த்த வைத்தியசாலை கிராமிய வைத்தியசாலையாக பயன்படுத்தப்படுகின்றபோதிலும் அதனை தினமும் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்பாடுசெய்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரவு வேளையில் நோய்வாய்ப்படுவோரை நீண்டதூரம் கொண்டுசெல்லவேண்டிய நிலையுள்ளதாகவும் தமது பகுதிக்கான பிரதான வீதியும் பயன்படுத்தமுடியாத நிலையுள்ளதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நான்கு கிராமங்களிலும் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையிலும் இதுவரையில் ஒரு முழுமையான வைத்தியசாலையில்லையெனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாடசாலையானது 05ஆம் ஆண்டு வரையில் உள்ளதாகவும் ஐந்தாம் ஆண்டு கல்வியை பூர்த்திசெய்யும் பிள்ளை நீண்டதூரம் வேறுபாடசாலைக்கு செல்லவேண்டியுள்ளதனால் சிலவேளைகளில் தமது கல்வி இடைநிறுத்தும் நிலையுள்ளதாகவும் மக்களினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது யானைப்பிரச்சினை உள்ள பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு விவசாயிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பார்வையிட்டார்.அதன்போது அப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தினையும் பார்க்ககூடியதாகயிருந்தது.
இதன்போது கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், விவசாயிகள் பசளையின் இம்முறை பெரும் நஸ்டங்களை எதிர்கொண்ட நிலையில் இப்பகுதியில் யானைகளினாலும் பெரும்நஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.
விசேடமாக இந்த அரசாங்கமானது தெரிவுசெய்யப்பட்ட காலப்பகுதியில் ஒருஇலட்சம் கிலோமீற்றர் யானை வேலியை போடுவதாகவும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் இல்லாமல்செய்யப்படும் எனவும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாண ஆளுனர்,கிழக்கினை மீட்போர் என்போர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காட்டுப்பகுதியை தூய்மைப்படுத்தி பெரும்பான்மையினத்தவர்களை குடியேற்றமுற்பட்டதனால் இன்று மக்கள் குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கும் நிலையேற்பட்டுள்ளது.
இதற்கு அரசாங்கத்துடன் இருப்பவர்கள் வெட்கப்படவேண்டும்.ஒன்றரை வருடத்தில் ஐந்து மீற்றா யானைவேலிகூட போடவில்லை.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி எதனையும் பூர்த்திசெய்யாமல் இந்த அரசாங்கம் ஒரு தோல்வி அடைந்த அரசாங்கமாகவே பார்க்கப்படவேண்டும்.
அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே கொங்கிறிட் பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தினை பலப்படுத்துவதுடன் உண்மையான அபிவிருத்தி.
நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்தாலும் கூட மக்களுடன் இருந்து மக்களின் பிரச்சினைகளுக்கா தொடர்ந்து குரல்கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.