இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் திருக்குமார் நடேசன்
முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் (Nirupama Rajapaksa) கணவரான திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பண்டோரா ஆவணத்தில் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரியவந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் அவர் குறித்த ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பண்டோரா ஆவணங்கள் சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய திருக்குமார் நடேசன், இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு பற்றி விசாரணைகளை நடத்தி அறிக்கை ஒன்றை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எது எப்படி இருந்த போதிலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய சுதந்திரமான நிறுவனமாக செயற்பட்டு வந்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை அப்போதைய நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவை நியமித்தது வந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு, ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கும் 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.
20வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நீதித்துறை, பொலிஸ், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உட்பட முக்கியமான பொது நிறுவனங்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்கி வருகிறார்.
இதனால், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்தும் விசாரணையில் நம்பிக்கையில்லை எனவும் சர்வதேசத்திற்கு சென்றுள்ள பண்டோரா ஆவணங்கள் தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரிடம் வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி மற்றும் சொத்துக்கள், ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருப்பதால், ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் விசாரித்தாலேயே உண்மைகள் வெளிவரும்.
ஜனாதிபதி செயலகத்திற்கே செல்ல முடியாத இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு எவ்வாறு இந்த வெளிநாடுகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அந்த கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பண்டோரா ஆவணங்கள் தொடர்பான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளமையானது திருடனின் தாயாரிடம் மை வெளிச்சம் பார்ப்பது போன்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.