திருக்கோணேஸ்வர ஆலய காணி விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுப்பு
திருகோணமலை - திருக்கோணேஸ்வர ஆலயத்தின் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்களை கட்டுபடுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை - திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் காணி துண்டும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர் காணித் துண்டும், கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்சஸ் உள்ளடங்கிய காணி துண்டும் திருகோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமானவை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருக்கோணேஸ்வர ஆலய காணி விவகாரம்
அத்துடன், திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கான உரிமை ஆணையை நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரி சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலமையிலான திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினரால், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக கடந்த 29ஆம் திகதி சித்திரை மாதம் 2026 அன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1950ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள் மற்றும் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பவற்றை கட்டுபடுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.
