செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள்
செம்மணி சித்துபாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தன் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம்(29.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில், இன்றைய அகழ்வுப் பணியின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு இலக்கங்களான 217 மற்றும் 220 ஆகிய இலக்கங்களை கொண்ட எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொல்லியல் ஆய்வறிக்கையின்படி
இதேவேளை ஏற்கனவே வடமேற்கு பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதில் எத்தனை எலும்பு தொகுதிகள் காணப்படுகின்றன என்பது சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே தெரியவரும்.

ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வறிக்கையின்படி இந்த அகழ்வு 1.5 அடியிலிருந்து 2 அடி ஆழமான நிலத்தில் தான் இதுவரை காலமும் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
ஆகவே அகழ்வு பணிகளின் ஆழமானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளின் போதே தீர்மானிக்கப்படும்.
மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை
ஸ்கான் பரிசோதனை செய்யப்படும்போதும் தெரிவு செய்யப்பட்ட பகுதியை அந்த ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது.

பரிசோதனை உட்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ் பணிகளை முன்னெடுப்பதோடு, ஏனைய இடங்களில் என்பு தொகுதிகள் இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
குறித்த பகுதியில் உள்ள மண்ணானது கறுப்பு நிறத்தில் இருப்பதால் அதில் ஏதாவது சான்று பொருட்கள் இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வு செய்வதற்காக மண்ணினை அரித்து எடுக்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்





