தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று(15) ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில்
நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் நினைவேந்தல்
தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று(15) இடம்பெற்றது.

குறிப்பாக தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சியில் நினைவேந்தல்
38ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று(15) இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினார்.
இதனை அடுத்து பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.
யாழ் தீவகம்- வேலணை
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான இன்று காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணைப் பிரதேசபையின் உறுப்பினர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருக்கோவில் பிரதேசம்
தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் ஊர்தியானது திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு ஆகிய அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசமெங்கும் பயணத்தினை முன்னெடுத்து குறித்த பிரதேசங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன.

மட்டக்களப்பு
தியாக தீபம் திலீபன் அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) மட்டக்களப்பின் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அனுசரிக்கப்பட்டது.
திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த முதல்நாளை நினைவுகூரும் வகையில் மாணவர்கள் சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பலரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

திருகோணமலை
உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) திருகோணமலை சிவன் ஆலயத்தின் அருகில் அனுசரிக்கப்பட்டது.
திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த முதல்நாளை நினைவுகூரும் வகையில், சமூகச் செயற்பாட்டாளர்கள் சுடர் ஏற்றி, உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பலரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு அஞ்சலியைப் பதிவு செய்தனர்.

பின்னணி
1987 செப்டம்பர் 15 முதல் 26 வரை, யாழ்ப்பாணம் நல்லூரில் 12 நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் வீரச்சாவைத் தழுவினார்.
அவர் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துதல், சிறைகளிலும் முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்தல், அவசரகாலச் சட்டத்தை முழுமையாக நீக்குதல், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை முற்றாகக் களையுதல், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதை நிறுத்துதல் என்பனவாகும்.
இந்த நிகழ்வின் மூலம் சமூகச் செயற்பாட்டாளர்கள் தியாக தீபம் திலீபனின் தியாகத்தையும் அவரது கோரிக்கைகளின் தொடர்ந்த முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


























முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri