தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தலை குழப்பும் முயற்சியில் சைக்கிள் கட்சி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
தியாகதீபம் திலீபனுடைய ஆவணக் காட்சி இடத்தையும் மாவீரர் நாள் நினைவேந்தலையும் நடத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்ற இடத்தினை வழங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒத்துழைக்க வேண்டும் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வை குழப்பும் வகையில்
மேலும் தெரிவிக்கையில், தியாகதீபம் திலீபன் அண்ணாவினுடைய நினைவேந்தல் அவர் உண்ணாவிரதம் இருந்த நாளான இன்றையதினம் தொடங்குகின்றது.
இந்த நிலையில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம், தியாக தீபம் திலீபன் அண்ணாவினுடைய வாழ்க்கை வரலாற்றையும் அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களிலே அவர் அனுபவித்த வேதனைகளையும் அவருடைய தளராத உறுதியையும் ஆவணப்படுத்தி ஒரு ஆவண காட்சியகமாக 2023 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக நல்லூரில் திலீபன் அண்ணாவுடைய பிரதான தூபி அமைந்திருக்கின்ற பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வந்திருந்தோம்.
இந்த வருடமும் ஆவண காட்சியகத்தை மீண்டும் செய்வதற்கு நாங்கள் முயற்சித்த பொழுது ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறித்த இடத்தினை முன் பதிவு செய்துவிட்டது என்ற காரணத்தினால் எங்களுக்கான அனுமதிகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.
நாங்கள் தொடர்ச்சியாகவே அந்த இடத்திலே அந்த ஆவண காட்சியகத்தை செய்து வருகின்றோம்.
இந்த நிலையிலே அந்த நிகழ்வை குழப்பும் வகையிலே அல்லது அந்த நிகழ்வை நீர்த்துப் போக செய்கின்ற வகையிலே இந்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன.
நாங்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்து அதே இடத்திலேயே மாவீரர் நாள் நிகழ்வுகளையும் செய்து வருகின்றோம். 25,000ற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை நாங்கள் அந்த இடத்திலே வைத்திருந்தோம்.
கட்சியிலிருந்து விலகிய பிற்பாடு
2019 ஆம் ஆண்டு நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலே இருந்த பொழுது, குறித்த கல்வெட்டுகளை வைத்து அந்த நிகழ்வினை முதன்முதலாக ஆரம்பித்த பொழுது எங்களுடைய கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் வந்தது.
எங்களுடைய கட்சி தலைமை எனக்கு நேரடியாகவும் என்னுடைய சக மாநகர சபை உறுப்பினர்களாக இருந்த சிலருக்கும் நேரடியாகவே சொல்லி இருந்தார்கள்.
அந்த இடத்திலே அவ்வாறான நிகழ்வுகளை செய்யக்கூடாது என்றும் நாங்கள் கோப்பாயிலே இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மக்கள் வருவதை தடை செய்கின்றோம் அல்லது அவர்களை வர முடியாமல் இங்கே நாங்கள் திசை திருப்புகின்றோம் என்ற நிலையிலே எங்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
இருந்த பொழுதும் நாங்கள் பின் நாளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து விலகிய பிற்பாடு 2022 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அந்த இடத்திலே மாவீரர் நாள் நிகழ்வுகளையும் நாங்கள் செய்து வருகின்றோம்.
இன்றைக்கு அந்த நிகழ்வுகளை குழப்புகின்ற வகையிலே நடைபெறுகின்ற இந்த செயற்பாடுகளை நிறுத்தி அந்த நிகழ்வுகளை நாங்கள் ஒற்றுமையாக செய்கின்ற வகையில் எங்களுக்கு அந்த நிகழ்வை தொடர்ச்சியாக செய்ய நீங்கள் வழி சமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்த இடத்திலே நாங்கள் விடுகின்றோம்.
அதே நேரத்தில் உண்மையில் எங்களுடைய மக்கள் பேரெழுச்சி கொள்ள வேண்டும், எங்களுடைய இலக்கை நோக்கி நாங்கள் நகர்த்த வேண்டும் என்று சொன்னால் எங்களுக்குள்ளே இருக்கின்ற இந்த பாகுபாடுகளை களைந்து விட்டு அந்த அந்த இடங்களை அவரவர் பாட்டுக்கு அந்த மக்களை எழுச்சி கொல்லுகின்ற செயற்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



