நீதி இல்லாத நாட்டில் தற்போது நிதியும் இல்லை : கோ.கருணாகரம்
அண்ணனின் ஆட்சியிலும் நீதி இல்லை, தம்பியின் ஆட்சியிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது. நீதி இல்லாத நாட்டில் தற்போது நிதியும் இல்லை. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் நினைவுத் தூபியில் இன்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதி இல்லாத நாட்டில் தற்போது நிதி கூட இல்லாமல் இருக்கின்றது. நீதியும் இல்லை, நிதியும் இல்லை. ஆனால், இல்லாத நீதிக்கும், நிதிக்கும் ஒரு அமைச்சர் மட்டும் இருக்கின்றார்.
அந்த அமைச்சர் இன்னும் ஒரு மாதத்திலே இந்த நாட்டிலே நிலவியுள்ள பொருளாதாரப் பிரச்சனைக்குத் தீர்வு வரும் என நேற்றைக்கு முன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலே உறுதியளித்துள்ளார். எந்தவொரு சிறுபிள்ளையும் இவரின் இந்தக் கருத்தை நம்பாது.
இதேபோன்ற தான் இந்த அரசு நாட்டு மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றது. பொருளாதார ரீதியில் மாத்திரமல்லாமல், ஆயுதப் போராட்ட முடிவில் சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்ட காரணத்தினால் இந்த ராஜபக்ச சகோதர்கள் அரசை உலகத்தில் எவருமே நம்ப முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
உலகத்திலே மிகவும் பிரபல்யமாக வந்த அரச தலைவராகவும், மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கப்படும் தலைவராகவும் கோட்டபாய ராஜபக்ச திகழ்கின்றார். இவர் ஒரு போர்க்குற்றவாளி. இவரை தமிழ் மக்கள் 2019ம் ஆண்டே வேண்டாமென்று நிராகரித்திருந்தார்கள்.இன்று அவரை வேண்டுமென்று கொண்டு வந்தவர்களே வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.
எனவே இவர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும். இந்த நாடு ஒரு முன்னேற்ற
நிலைக்குச் செல்ல வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி
வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடாகும்” என்று தெரிவித்தார்.



