கொழும்பில் அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பை கொள்ளையடிப்பு
அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்கப் பெண் அதிகாரி கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார்.
நேற்று மாலை அருகில் உள்ள பகுதியில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் அவரது கைப்பையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடையாளம் காணப்பட்ட மோட்டர் சைக்கிள்
கைப்பை திருடப்பட்டதும், குறித்த அதிகாரி அச்சத்துடன் வீடு திரும்பியுள்ளாதுடன் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பெண் அதிகாரியிடம் முறைப்பாட்டை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பை பறித்துக்கொண்டு தப்பியோடிய இரண்டு பேர் சென்ற மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் தற்போது அடையாளம் கணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.