ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு: நானுஓயாவில் சம்பவம் (Video)
நுவரேலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் பிரதேசத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (26.02.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நானுஓயா - டெஸ்போட் மேல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகேந்திரன் சதிஸ்குமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விசாரணை
நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோது குறித்த இளைஞன் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டில் சிறிய முரண்பாடு காரணமாக நானுஓயாவில் கிளாரண்டன் பகுதியில் தனது உறவினர் வீட்டில் ஐந்து நாட்களுக்கு மேலாகத் தங்கி இருந்த நிலையிலே குறித்த இளைஞன் நேற்றைய தினம் நீராடச் சென்றுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை
பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் இளைஞனின் சடலத்தைக் கரைக்குக் கொண்டு வந்து சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.