சர்வதேசத்தில் இலங்கைக்கு ஏற்படவுள்ள மோசமான நிலை
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிறுவனமாக இருந்த இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நிலைக்கு ஒரு அரசியல்வாதியை நியமிப்பது, சர்வதேச அளவில் நாடு மற்றும் அதன் பொருளாதாரம் மீது மோசமான தோற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் பணமதிப்பிழப்பை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ஒரு அரசியல்வாதி மத்திய வங்கியை கைப்பற்றுவதால், இலங்கை ஒரு கறுப்பு பொருளாதாரமாக கருதப்படுவதை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித் நிவார்ட் கப்ரால், கிரேக்க முறி சம்பவம், ஹெட்ஜிங் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவில் நாட்டின் மதிப்பை அதிகரிக்கும் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கான ரூபாய்களை மோசடி செய்தவராவார்.
எனவே அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் நாடு மோசமான நிலையையே எதிர்நோக்கும் என்று அனுரகுமார குறிப்பிட்டார்.
அமைச்சரவை அதிகாரங்களுடன் மத்திய வங்கியின் ஆளுநராக கப்ராலை நியமிக்க எந்த சட்ட விதிகளும் இல்லை என்றும் அந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகாரங்களும் கடமைகளும் உள்ளன என்றும் அனுரகுமார கூறினார்.
இதேவேளை அண்மைக்காலமாக பல அரச அதிகாரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தமையை சுட்டிக்காட்டிய அனுரகுமார, அரசாங்கத்தின் தவறான முடிவுகளை செயற்படுத்தும் அரச ஊழியர்கள் மட்டுமே தங்கள் பதவியில் இருக்க முடியும் என்றும் கூறினார்.
தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் இஷினி விக்ரமசிங்க, கோவிட் பணிக்குழுவின் பல மருத்துவ நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தமையை அனுரகுமார கோடிட்டு காட்டியுள்ளார்.