இலங்கை விஜயம் மிகவும் பயனானது! - சீன பாதுகாப்பு அமைச்சர்
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இரவு இலங்கையை வந்தடைந்து சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக கருத்தில் கொள்ளப்பட்டிருந்த நிலையில் இருதரப்பு உறவுகள் தனது விஜயத்தின் மூலம் பலமடைந்திருப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபயவுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரை வரவேற்றிருந்தனர்.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தனது வருகையை நினைவுகூரும் வகையில் விசேட விருந்தினருக்கான நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடிய சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) தலைமையிலான குழு இரு தரப்பு ஒத்துழைப்புகள் குறித்து மிக விரிவாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.