வடக்கில் வெசாக் தடை என்பது அப்பட்டமான பொய்! வெசாக் நிகழ்வில் ஆளுநர் வேதநாயகன் அதிரடி
வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்திகள் முற்றுமுழுதான பொய் என்பதை வவுனியாவில் நடைபெற்ற இந்த வெசாக் உற்சவம் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பொய் பரப்புபவர்கள் வார்த்தைகளால் பிரிக்க முயல்கிறார்கள், நாம் செயலால் இணைகின்றோம். அதுவே எமது பதில் என்றும் குறிப்பிட்டார்.
வெசாக் தடை
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்ட 'வடக்கு மாகாண வெசாக் உற்சவம்' நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வவுனியா, பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், வடக்கு – கிழக்கு பிரதம சங்கநாயக்கரும் மடுகந்த சிறி தலாதா விகாராதிபதியுமான வணக்கத்துக்குரிய ஆனந்த தேரர், வடக்கு – கிழக்கு உதவி சங்கநாயக்கர் அட்டமகஸ்கட கல்யான திஸ்ஸ தேரர், பிரதி அமைச்சரும் வன்னித் தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வவுனியா மாவட்டச் செயலாளர், வவுனியா மாவட்ட மேலதிகச் செயலாளர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் வன்னிப் பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், 56ஆவது படையணியின் பிரிகேட் கொமாண்டர், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.
மிகவும் பக்திபூர்வமாக ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த இந்த வெசாக் உற்சவத்தில், தர்ம போதனை, மிகப் பிரமாண்டமான வெசாக் ஊர்வலம் விருந்தினர்களின் பங்கேற்புடன் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடைபெற்றது. தொடர்ந்து வெசாக் கூடுகளின் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறுதியாக தானம் வழங்கல் (தன்சல்) மற்றும் மேடை நிகழ்வுகளுடன் கூடிய பக்தி கீதம் இசைத்தல் உள்ளிட்ட பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் வரையில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், "வெசாக் என்பது உலக பௌத்த சமூகத்துக்கு மிகவும் புனிதமான நாளாகும்.
பிரமாண்டமானதொரு வெசாக் நிகழ்வு
கௌதம புத்தர் பிறந்ததும், ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் அடைந்ததும் ஆகிய மூன்று மகத்தான நிகழ்வுகளும் இந்தப் பௌர்ணமி நாளிலேயே நிகழ்ந்தன. இங்கு ஏற்றப்படும் ஒவ்வொரு வெசாக் கூடும், அகல் விளக்கும் வெறும் அலங்காரங்கள் அல்ல, அவை அமைதியின், அன்பின் ஒளியை இவ்வுலகுக்குப் பரப்பும் சின்னங்களாகும்.
வடக்கு மாகாணம் என்பது பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எனப் பல இனங்களும் மதங்களும் அண்டை அயலவர்களாய், சகோதரர்களாய் வாழும் பூமியாகும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளைப் புறந்தள்ளி, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்துள்ளோம் என்பதை இந்த நிகழ்வு உலகுக்குப் பறைசாற்றுகின்றது.
புத்தபெருமான் நமக்கு விட்டுச்சென்ற போதனைகள் வெறும் கோயில் சுவர்களில் எழுதி வைக்கும் வாசகங்கள் அல்ல, நம் அன்றாட வாழ்க்கைக்கான வழிகாட்டிகளாகும். தம்மபதத்தில் புத்தர் கூறிய 'வைரத்தால் வைரம் ஒருபோதும் தணியாது, அன்பால் மட்டுமே வைரம் தணியும்' என்ற போதனையானது, நீண்ட காலம் போரின் வடுக்களைச் சுமந்த இந்த மண்ணுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

பழியைப் பழியால் வென்றுவிட முடியாது. அன்பும், மன்னிப்பும், சமாதானமுமே அந்தச் சங்கிலியை அறுக்கும். புத்தரின் 'சரியான பேச்சு' என்ற போதனை இந்த நவீன டிஜிட்டல் யுகத்துக்கு மிகவும் அத்தியாவசியமானது.
ஒரு வார்த்தையைப் பேசுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர் அது உண்மையா, அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆராய்வது அனைவரினதும் பொறுப்பாகும்.
அதேபோன்று, கோபமும் பகையும் முதலில் சுட்டெரிப்பது நம்மைத்தான். சொல்லாலும், செயலாலும், எண்ணத்தாலும் பிறரைப் புண்படுத்தாமல் வாழும் 'அஹிம்சை'யைப் பின்பற்றும் ஒரு சமூகத்தில் வன்முறைக்கு இடமிருக்காது.
புத்தர் கருணையைப் போதித்தார். இந்து சமயம் 'அன்பே சிவம்' என்கிறது, கிறிஸ்தவம் 'உன் அயலானை உன்னைப் போல் நேசி' என்கிறது, இஸ்லாம் இரக்கத்தையும் கருணையையும் போற்றுகின்றது. வழிபடும் முறைகளும் மொழிகளும் வேறாக இருக்கலாம்; ஆனால் எல்லா மதங்களும் இறுதியில் போதிப்பது அன்பை மட்டுமே.
அந்த அன்பின் ஒளியில் வடக்கு மாகாணம் என்றும் ஒன்றுபட்டு, அமைதியாக, மலர்ச்சியுடன் வளர வேண்டும் என்றார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக இவ்வாறான மிகப் பிரமாண்டமானதொரு வெசாக் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்






சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan