உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு பதினொரு சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு 11 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - பாலையூற்று பகுதியை சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட 11 சிறார்களுக்கே இவ்வாறு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று(22) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாயாரின் கவனயீனம்

தலைக்கு வைக்கும் பேன் மருந்தை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சமையலறையில் வைத்திருந்த நிலையில் இன்று காலை அந்த எண்ணெய்யை தேங்காய் எண்ணெய் என நினைத்து தாயார் நூடில்ஸ் தயாரித்து காலை உணவாக சிறார்களுக்கு கொடுத்துள்ளார்.
இதனால் மயக்கமடைந்த சிறார்கள் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.