சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் மூன்று கட்சிகள் ஜனாதிபதியுடன் ஆலோசனை
சர்வ கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மூன்று கட்சிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
நேற்று மாலை முதலாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்து உரையாடியுள்ளது.
அதன்போது அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி சாதகமான பதில் வழங்கியுள்ளார்.
நவலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் சந்திப்பு
அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான நவலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இன்று சந்திப்பு |
இந்தக் கட்சியில் குமார வெல்கம மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள ஏராளம் முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னாள் தொகுதி அமைப்பாளர்களும் இந்தக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அத்துடன் தற்போதைக்கு சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒரே கட்சியாகவும் குமார வெல்கமவின் கட்சி செயற்படுகின்றது.
அத்துடன் ஜனாதிபதித் தெரிவின் போது குமார் வெல்கம நேரடியாக ரணிலை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது கட்சியினரும் நாடாளுமன்ற மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
அதுரலியே ரத்ன தேரர் தலைமையிலான அவரது கட்சியினர் சந்திப்பு
அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தலைமையிலான அவரது கட்சி முக்கியஸ்தர்களும் சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்து ஜனாதிபதியுடன் கருத்துப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் இன்றும் நடைபெறவுள்ள நிலையில் முஸ்லிம் தரப்பின் முக்கிய கட்சிகள் இன்று கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.