நாட்டு மக்களுக்கு வயிறு மட்டும் தான் முக்கியம் என விமர்சித்த ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி
இந்த நாட்டு மக்களுக்கு வயிற்றை நிரப்பிக் கொள்வது தான் முக்கியமாக காணப்படுகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலளார் சந்திப்பு ஒன்றில் பொருட்களின் விலை ஏற்றம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
''இந்த நாட்டு மக்கள் சுதந்திரம் கிடைத்தது முதல் 70 ஆண்டுகளாக தங்களின் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
இந்த நாட்டு மக்கள் வயிற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாட்டுக்கு அளிப்பதில்லை. இவ்வாறு செய்தால் அடுத்த தலைமுறையினர் நம் மீது சாபமிடுவார்கள்.
நாட்டை பற்றி நினைக்காது மக்களின் வயிற்றை நிரப்புவதற்கு முன்னுரிமை அளித்தால் அது நாட்டின் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய அழிவாகும்.
உலக அளவில் பெருந்தொற்று நிலைமை காணப்படுவதனால் நாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளது.
பொருட்களின் விலை உயர்த்தப்படுவதனை விரும்பாத போதிலும் வேறு வழியில்லை. போரை முடிவுக்குக் கொண்டு வந்து நல்ல பொருளாதாரம் இருந்த காலத்தில் கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியவில்லை.
உலக அளவில் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது சட்டங்களை போட்டு அவற்றை இலங்கையில் கட்டுப்படுத்த முடியாது.
கூடுதல் விலைக்கு வாங்கி எந்தவொரு வர்த்தகரும் குறைந்த விலைக்கு வழங்க மாட்டார்கள்'' என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.