மன்னாரில் நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு நாளை திங்கட்கிழமை(9) முதல் 2வது தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி நாளை திங்கட்கிழமை (9) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மற்றும்,பேசாலை சென் மேரிஸ் கல்லூரி ஆகியவற்றிலும், அன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை, மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்கப்படும்.
அதே போன்று மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை திங்கட்கிழமை (9) காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
அன்றைய தினம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை (9) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் வங்காலை புனித ஆனாள் தேவாலயத்திலும், செவ்வாய்க்கிழமை (10 ) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நானாட்டான் டிலாசால் பாடசாலையிலும், அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணி வரை முருங்கனில் அமைந்துள்ள நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) மடு ஆலயத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும், இரணையிலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலையிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
எனவே கடந்த மாதம் சினோபாம் தடுப்பூசியின் முதலாவது ஊசியினை பெற்றுக் கொண்ட அனைவரும் தடுப்பூசி அட்டையையும், தேசிய அடையாள அட்டையையும் தவறாது எடுத்து வந்து உங்களுக்குரிய இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.




