கொழும்பு மாநகர சபையின் ஆட்சி சஜித் தரப்புக்கே! முஜிபுர் ரஹ்மான் திட்டவட்டம்
எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றுவதை அரசாங்கம் கண்டுகொள்ளலாமென கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு நாங்கள் தடையாக இருப்பதில்லை.
கொழும்பு மாநகர சபை
அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, அந்த சபைகளில் எதிர்க்கட்சியில் எந்த கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருக்கின்றதோ அந்த கட்சியில் தலைவர் ஒருவரை தெரிவு செய்துகொண்டு ஆட்சியை கொண்டு செல்ல தீர்மானித்திருக்கிறோம்.
அதன் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு 48 ஆசனங்களே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. எதிர்க்கட்சிகளுக்கு மொத்தமாக 69 ஆசனங்கள் இருக்கின்றன.
அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
