ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது-குமார வெல்கம
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து இணைந்து செயற்பட வேண்டும் என நவ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நவ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்க்க ஐ.மக்கள் சக்தியும் இணைய வேண்டும்
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும்.இந்த அரசாங்கம் முன்நோக்கி செல்லாது. ரணில் விக்ரமசிங்க எந்தளவுக்கு சிறந்தவராக இருந்தாலும் மொட்டுக்கட்சியினர் அவரை முன்நோக்கி செல்லவிட மாட்டார்கள். மொட்டுக்கட்சியினர் அவரது காலைப்பிடித்து இழுப்பார்கள். புதிய தேர்தலுக்கு செல்வதே இதற்கு சிறந்த வழி.
ஜே.வி.பி பற்றி பேச விரும்பவில்லை
மக்கள் விடுதலை முன்னணி பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. மக்கள் விடுதலை முன்னணி காரணமாகவே நான் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன்.
அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருந்தது. எனினும் போராட்டத்தில் உண்மையான போராட்டகாரர்கள் செய்த வேலையை அவர்கள் செய்யவில்லை. அவர்கள் வேறு பயணத்தை மேற்கொண்டனர்.
ராஜபக்சவினருக்கு மக்கள் மத்தியில் ஆதரவில்லை
ராஜபக்சவினர் தலைமையில் புதிய சக்தி உருவாகாது. அது பொய். ராஜபக்சவினரின் அரசியல் பலம் வீழ்ச்சியடைந்து விட்டது.எனக்கு தெரிந்த வரையில் ராஜபக்சவினருக்கு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
எனினும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க முடியும்.அது தனியான கதை.எனினும் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.