கரைவலை தொழில் செய்யும் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: எஸ்.லோகநாதன் கோரிக்கை
காரைதீவிலும் அண்டிய பிரதேசங்களிலும் கரைவலை மீன் பிடி தொழில் செய்கின்ற உறவுகளின் நீண்ட கால பிரச்சினையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
“ஆழி பேரலை அனர்த்தத்துக்கு பின்னர் காரைதீவிலும் அண்டிய பிரதேசங்களிலும் கரையோர கடல் பகுதிகளில் பிரமாண்டமான கற்பாறைகள் எழுந்து நிற்கின்றன.
இது பாரம்பரிய கரை வலை கடற்தொழிலாளர்களுக்கு பாரிய சவாலாக இருந்து வருகின்றது. பாறைகள் கிழித்து கரைவலைகள் அறுந்து விடுகின்றன.
இதனால் கரைவலை கடற்தொழிலாளர்களின் தொழில் மாத்திரம் அல்ல வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. வீண் செலவுகளும் ஏற்படுகின்றன.
முன்வைக்கப்படும் கோரிக்கை
கரைவலை கடற்தொழிலாளர்கள் ஏழைகள் ஆவர். இந்நிலைமை தொடருமானால் எதிர் காலத்தில் இப்பிரதேசங்களில் கரை வலை மீன் பிடி தொழில் முற்று முழுதாக இல்லாமல் போகின்ற அவலமும் கண் முன் தெரிகின்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகின்ற வாரங்களில் ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் திறந்து வைக்க வருகின்றார் என்று அறிய கிடைக்கின்றது.
அப்போது அவர் காரைதீவுக்கு கள விஜயம் மேற்கொண்டு கரைவலை கடற்தொழிலாளர்களின் உறவுகளை சந்தித்து பேச வேண்டும் என்று எமது கடற்தொழிலாளர்களின் உறவுகள் சார்பாக கேட்டு கொள்கின்றேன்.
அதிநவீன தொழினுட்ப பொறிமுறை மூலமாக கற்பாறைகளை அவர் அகற்றி தர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் விநயமாக வேண்டி கொள்கின்றேன்” என்றார்.
ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 3 மாவட்டங்களில் ஆரம்பமாவதாக அறிவிப்பு |