நான் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும்! - அமைச்சரை எச்சரித்துள்ள ஜனாதிபதி
இரசாயன உரங்கள் குறித்து தற்போது சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு விவசாய அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த மதகுரு ஒருவரைசந்தித்த பின்னர்விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரசாயன உரங்கள் குறித்து தற்போது சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு விவசாய அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாய அமைச்சரின் செயலாளராகக் கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை பதவியிலிருந்து விலக்க விவசாய அமைச்சருக்கு இருந்த விருப்பத்தை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இரசாயன உரத் திட்டத்தை சுமேதவுடன் செய்ய முடியாது என்று மஹிந்தானந்தா ஜனாதிபதியிடம் பலமுறை கூறியுள்ளார் என்றும் மஹிந்தானந்தாவுக்கு பழக்கப்பட்ட நபரை அதில் இணைத்துக் கொள்ள விரும்பினார் என்றும் தெரிய வந்துள்ளது.
இறுதியில், ஜனாதிபதி மஹிந்தானந்தாவின் வார்த்தைகளிலிருந்து தப்பிக்க முடியாத இடத்தில் சுமேதவை நீக்கி, மஹிந்தானந்த விரும்பும் நபருக்கு அனுமதித்தார்.
நியமிக்கப்பட்ட உடனேயே, “இது ஒரு எளிய விடயம், ஐயா என மஹிந்தானந்தாவின் செயலாளர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான இயற்கை உரத்தை 100 வீதம் உற்பத்தி செய்ய முடியும் என்று அவர்கள் பெருமை பேசினார்கள்.
ஆனால் உரம் நெருக்கடி தொடரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததால், மஹிந்தானந்தாவும் அவரது செயலாளரும் நாட்டின் உரத் தேவையில் 25 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினர்.
இதையெல்லாம் அவதானித்த ஜனாதிபதி இறுதியாக மஹிந்தானந்தாவிடம் உரையாற்றினார்.
“நீங்கள் சொன்னீர்கள் தானே சுமேதவுடன் இந்த வேலையைச் செய்ய முடியாது என்று அவரை பதவியிலிருந்து நீக்குமாறும் இப்போது அவரை பதவியிலிருந்து நீக்கிய பின்னர் நீங்கள் வேலையைச் சரியாகச் செய்தீர்களா?
இந்த வேலைக்கு அனுபவங்கள் உள்ளவர்களை இணைத்துக்கொண்டு வேலையை ஆரம்பிக்குமாறு நான் உங்களுக்கு கூறியிருந்தேன். ஆனால், உங்களுக்கு இன்னும் இந்த வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லை.
இந்த வேலையைச் செய்யக்கூடிய நபர்களை நீக்கிவிட்டீர்கள், இது குறித்து மீண்டும் பேச வைக்கவேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தயவுசெய்து இந்த வேலையைச் சரியாகச் செய்யுங்கள், இல்லையெனில், நான் ஒரு முடிவை எடுக்க வேண்டி யிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.